நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், எதிர்காலத்தில் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினால், தனது இடத்திற்கு சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் பதவியேற்பார் என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (19) அமர்வில் உரையாற்றிய அவர், தன்னுடன் வருகை தந்திருந்த கௌசல்யா நரேந்திரன் தொடர்பில் ஏற்பட்ட சம்பவத்தை முன்வைத்து இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வருகை தரும் விருந்தினர்களை அமர்த்த வேண்டிய இடம் மற்றும் அதற்கான நடைமுறைகள் குறித்து தீர்மானம் எடுப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தனது வலதுபுறத்தில் அமர்ந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தன்னுடன் வந்திருந்த சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனை கேவலமான முறையில் அவமதித்ததாக அர்ச்சுனா இராமநாதன் குற்றஞ்சாட்டினார்.
மேலும், “அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் போது, எனக்கு அடுத்ததாக கௌசல்யா நாடாளுமன்ற உறுப்பினராக வரவுள்ளார்” எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை விட அதிக வாக்குகளை சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் பெற்றிருந்ததாகவும், இன்று நாடாளுமன்ற வாசிகசாலை பகுதியில் அவரை மிகவும் மோசமான முறையில் அவமதித்துச் சென்றதாகவும் அர்ச்சுனா இராமநாதன் சபையில் குறிப்பிட்டார்.
இந்த கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளன.








