நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை படிப்படியாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது. குறிப்பாக சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட கனமழையும் பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை வடக்கு மாகாணம், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல முறை மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் நேரங்களில் இடியுடன் கூடிய மழை உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடியதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.








