தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவைக் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் மற்றும் பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள போர் நினைவிடத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் (18) இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பாக, விமல் வீரவன்சவுக்கு எதிராக இன்று (20) பொலிஸார் நீதிமன்றத்தில் பி அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.

சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், விமல் வீரவங்சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகப் பொலிஸ் தரப்பு விபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கடந்த 18ஆம் திகதி விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர் போர் நினைவிடத்திற்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்தபோது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை நினைவிடத்திற்கு அருகில் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.
இதன்போது, விமல் வீரவன்சவின் ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே அந்தப் பகுதியில் கடுமையான அமைதியின்மை ஏற்பட்டதுடன், காரசாரமான வார்த்தைப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.
இந்த முன்தள்ளுமுள்ளுகளின் போது, பொலிஸ் அதிகாரிகளைத் தள்ளிக்கொண்டு முன்னோக்கிச் செல்ல விமல் வீரவன்ச முயன்ற வேளையில், அவர் நிலைதடுமாறித் தரையில் விழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தின் பின்னணியிலேயே தற்போது அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப் பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.








