இலங்கையில் சந்தையில் சீனியின் விலை சற்றே அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமது நாட்டில் இருந்து சீனி ஏற்றுமதி செய்யப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்தியா எடுத்துள்ள தீர்மானம் காரணமாக, இலங்கைக்கு ஏனைய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பிரேசில், தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சீனியை அவசரமாக இறக்குமதி செய்வது குறித்து தற்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சீனி ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஏற்றுமதித் தடையானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்குத் தேவையான சீனியில் பெரும்பகுதி இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இந்தியாவின் இந்தத் தடையின் காரணமாக வேறு மாற்று நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், தற்போது நாட்டிற்குள் நுகர்வுக்குப் போதுமான அளவு சீனி கையிருப்பில் உள்ளதாலும், புதிய இருப்புக்களைப் பிரேசில், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து விரைவாக இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாலும், உள்நாட்டுச் சந்தையில் சீனித் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது எனச் சங்கம் உறுதியளித்துள்ளது.
இதேவேளை, இலங்கை ரூபாயின் மதிப்புடன் ஒப்பிடுகையில் டொலரின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாகவே தற்போது சந்தையில் சீனியின் விலையில் சற்றே அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்தியா சீனி ஏற்றுமதியை நிறுத்தியமை தற்போதைய சீனி விலை அதிகரிப்பிற்கு நேரடிக் காரணமல்ல என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.








