நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா போன்ற நகைச்சுவையாளர்களின் கருத்துக்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது எனப் பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அவரால் முன்வைக்கப்படும் இனவாதக் கருத்துக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (19) இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தைகள் தொடர்பில் அனைவரும் நன்கு அறிவர்.
எனவே அவர் முன்வைக்கும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கமோ அல்லது மக்களோ பதற்றமடையத் தேவையில்லை.
அவர் கூறுவதை எவரும் கவனத்தில் எடுப்பதுமில்லை மேலும் அவரால் தெரிவிக்கப்படும் இனவாதக் கருத்துக்களுக்கு எந்தவொரு முக்கியத்துவமும் இல்லை.
அவை முற்றிலும் அடிப்படையற்றவை. இவ்வாறான நகைச்சுவையாளர்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது.
மக்களும் இவ்வாறான கருத்துக்களை அங்கீகரிக்கப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.








