பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தின் சில்லில் சிக்குண்டு, குடும்பஸ்தர் ஒருவர் இன்று (20) காலை 9.30 மணியளவில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் புறப்படுவதற்காகத் தயாராக இருந்த தனியார் பேருந்தை இயக்கச் (Start) செய்துவிட்டு, அதன் சாரதி கீழே இறங்கியுள்ளார். அப்போது பேருந்தின் தடையாளி (Hand Brake) சரியாக இயங்காததன் காரணமாக, பேருந்து திடீரென முன்னோக்கி நகர்ந்துள்ளது. இதனால் பேருந்துக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த குறித்த குடும்பஸ்தர் மீது பேருந்தின் சக்கரம் ஏறியுள்ளது.
இதன் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இக்கோர விபத்தில் உயிரிழந்தவர் நோர்வூட், சென்ஜோன் டிலரி மேல்பிரிவு தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், திருமணம் முடித்து தற்போது வவுனியா செட்டிக்குளம் பகுதியில் வசித்து வந்தவருமான 27 வயதுடைய புஷ்பகுமார சிந்துஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வட்டாரத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் குழாய் நீர் அகழும் விசேட வேலைத்திட்டம் ஒன்றிற்காக, தனது பணிக்குரிய குழுவினருடன் வவுனியாவிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு வருகை தந்திருந்த போதே அவருக்கு இந்தத் துயரமான முடிவு நேர்ந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகப் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி பொகவந்தலாவ பொலிஸாரினால் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








