மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள மயிலத்தமடு மற்றும் மாதவனை கால்நடை வளர்ப்பாளர்களின் மேய்ச்சல் தரைக்காக 1,570 ஏக்கர் நிலப்பரப்பினை உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு ஸ்ரீலங்கா மகாவலி அதிகாரசபைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிரடிப் பணிப்புரை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (20) காலை மட்டக்களப்பு பழைய கச்சேரி மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் மிக முக்கியமாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், இ.ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கந்தசாமி பிரபு ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னாயக்க, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாகாணத் திணைக்களப் பணிப்பாளர்கள் எனப் பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இவ்விசேட கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் பின்வருமாறு,
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக நீண்டகாலப் பிரச்சினையான மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் குறித்து ஜனாதிபதி உரிய திணைக்கள அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். அதன் பின்னர், நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் பொருட்டு, மகாவலி திணைக்களத்தின் வசமுள்ள 1,570 ஏக்கர் நிலப்பரப்பினை உடனடியாக விடுவித்து, கால்நடைகளின் மேய்ச்சல் தரைக்காக வழங்குமாறு ஜனாதிபதி அமுல்படுத்தத்தக்க உத்தரவைப் பிறப்பித்தார். அத்துடன், வரும் காலங்களில் இப்பிரச்சினைக்கு மேலும் தீர்க்கமான நல்ல முடிவுகள் எட்டப்படும் என்றும் உறுதியளித்தார்.

கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 10,900 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்ட 2,306 வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், இவ்வருடம் 8,625 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. குறிப்பாகக் கிராமியப் பாலங்கள், வீதிகள், வீட்டுத்திட்டங்கள் மற்றும் நீர்ப்பாசன வேலைத்திட்டங்களின் தற்போதைய நிதி நிலவரங்கள் மற்றும் எஞ்சியுள்ள பணிகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
சமீபத்தில் தாக்கிய ‘டித்வா’ (Dithwa) புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான இழப்பீட்டு நடைமுறைகள் மற்றும் குறிப்பாகப் பயிர்ச் சேதங்களை எதிர்கொண்ட விவசாயிகளுக்கான நட்டஈடுகள் தங்குதடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அளவில் இரண்டு குளங்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்படவுள்ள ‘முந்தனையாறு நீர்ப்பாய்ச்சல் குளம்’ வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன், அதன் எஞ்சிய அபிவிருத்திப் பணிகளை மிக விரைவாக ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார். அத்துடன், புன்னக்குடா கைத்தொழில் பேட்டைக்கான குடிநீர் வழங்கல், பட்டிருப்புப் பாலம் மற்றும் குருமண்வெளி – மண்டூர் பாலங்களின் புனரமைப்புப் பணிகள் குறித்தும் ஆராயப்பட்டது.
மாவட்டத்தில் நிலவும் காட்டுயானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அடையாளம் காணப்பட்ட சகல பகுதிகளுக்கும் யானை வேலிகளை அமைப்பதற்கான விசேட நிதியொதுக்கீட்டுப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, மட்டக்களப்பில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் (PMB) பிராந்தியக் காரியாலயம் இல்லாமையினால் ஊழியர்கள் சரிவர வருகை தருவதில்லை என்றும், நெல் கொள்வனவு முறையாக இடம்பெறுவதில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு மிகச் சிறந்த நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் பௌதிகக் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்த ஜனாதிபதி, வைத்தியசாலையின் தரம் உயர்த்தும் நோக்கில் தற்போது மூன்று முக்கிய புதிய திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இறுதியாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பின்தங்கிய நிலையை மாற்றி, புதிய பாதீட்டின் (Budget) ஊடாக மாவட்டத்திற்குத் தேவையான கூடுதல் அபிவிருத்தி நிதிகளை வரும் காலங்களில் ஒதுக்கீடு செய்து தருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இக்கூட்டத்தின் போது உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.
















