மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட பங்கேற்புடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் நேற்று (20) முற்பகல் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நவீன நிர்மாணப் பணிகள் அனைத்தும் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்து, மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதைக் காண்பதில் பெரும் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இங்கு குறிப்பிட்டார்.

இதற்கு இணையாக, மட்டக்களப்பு பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ புதிய இணையத்தளமும் (Official Website) ஜனாதிபதியினால் இதன்போது உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இப்புதிய நூலகக் கட்டிடத்தில், எதிர்காலச் சந்ததியினரான சிறுவர்களுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப (Science & Technology) அறிவை இலகுவாக வழங்கும் நோக்கில், தனியானதொரு நவீன பிரிவு நிறுவப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஜனாதிபதி,

“நாட்டில் தற்காலத்தில் வாசிப்பு கலாசாரம் படிப்படியாகக் குறைந்து வரும் இவ்வேளையில், தமிழ் மக்கள் இன்னமும் வாசிப்பதில் காட்டி வரும் அதீத ஆர்வம் மிகவும் பாராட்டத்தக்கது. நூலகம் ஒன்றைத் திறப்பது என்பது எதிர்காலத்தில் சிறைச்சாலையொன்றின் தேவையையே இல்லாமல் செய்வதற்குச் சமமானதாகும். இந்த நவீன பொது நூலகத்தின் புதிய கட்டிடத்தைத் திறப்பதன் மூலம் தமிழ் மக்களின் பாரம்பரியமிக்க புத்தக வாசிப்பு கலாசாரத்தை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், இளைய தலைமுறையினரை ஊக்குவிப்பதற்கும் இதுவொரு சிறந்த அடித்தளமாக அமையும்” எனத் தெரிவித்தார்.

திறப்பு விழாவைத் தொடர்ந்து, மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடப் பிரிவுகளை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, மாநகர சபை ஊழியர்களுடன் மிகவும் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன் போது மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் (நகரபிதா) கே. சிவம் பாக்கியநாதன், ஜனாதிபதிக்குத் தங்களது மதிப்பார்ந்த நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி கௌரவித்தார். அத்துடன், இந்நாளைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதியினால் நூலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஆகியோருடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, ஞா.ஸ்ரீநேசன், இரா.சாணக்கியன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உயர் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















