இவ்வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மட்டும் நாடு முழுவதிலும் சுமார் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மே மாதம் 15 ஆம் திகதி வரையிலான குறுகிய காலப்பகுதியிலேயே, இந்த அதிர்ச்சியூட்டும் காட்டு யானைகளின் மரணங்கள் அனைத்தும் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த யானைகளின் மரணங்களுக்கான முதன்மைக் காரணங்கள்,
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் – 20 காட்டு யானைகள்
சட்டவிரோத மின்சார இணைப்புகள் தாக்கியதால் – 15 காட்டு யானைகள்
‘ஹக்க பட்டாஸ்’ (Hakakka Patas) வெடிபொருட்களை உட்கொண்டதால் – 10 காட்டு யானைகள்
பாதுகாப்பற்ற விவசாயக் கிணறுகளுக்குள் விழுந்ததால் – 05 காட்டு யானைகள்
இவற்றுக்கு மேலதிகமாக, பயிர்களைப் பாதுகாக்க வைக்கப்படும் விஷப் பதார்த்தங்களை உட்கொண்டமை, வேகமாக வரும் ரயில்களுடன் மோதியமை மற்றும் ஆறுகள், குளங்களில் நீரில் மூழ்கியமை போன்ற துரதிர்ஷ்டவசமான விபத்துக்களினாலும் ஏனைய காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிராந்திய ரீதியாக நோக்குகையில், இலங்கையின் கிழக்கு வனஜீவராசி பிராந்தியத்திலேயே மிக அதிகளவிலான காட்டு யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாகப் பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய வனஜீவராசிப் பிராந்தியங்களிலும் கணிசமான அளவில் யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, காடழிப்பு மற்றும் வாழ்விட இழப்பு காரணமாகக் கிராமங்களுக்குள் ஊடுருவிய காட்டு யானைகளின் கொடூரத் தாக்குதல்களினால், இவ்வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 35 மனித மரணங்களும் பதிவாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மேலும் கவலையுடன் தெரிவித்துள்ளது.








