தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (TMVP) தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானைத் தாம் சிறைச்சாலையில் நேரில் சென்று சந்தித்தமை எந்தவொரு இரகசியமுமான விடயமல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானைச் சந்தித்தமை தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பது தற்போதைய அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு ‘அரசியல் ஊடக நாடகம்’ மட்டுமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்ற ஊடக அறிக்கைகள் வாயிலாக இந்தச் செய்தியை அறிந்த பின்னர், தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விசேட பதிவிலேயே அவர் இந்த அதிரடிப் பதிலை வழங்கியுள்ளார்.
அவர் பதிவில் கூறியதாவது,
“கடந்த 2018/2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சிறையிலிருந்தபோது, நான் அவரைச் சந்திக்கச் சென்றது உலகறிந்த விடயமாகும். உண்மையில், நான் அங்கு உத்தியோகபூர்வமாகச் சென்று வந்ததற்கான சிறைச்சாலை பதிவுகளை (Prison Records) எப்போது வேண்டுமானாலும் சட்டப்பூர்வமாகப் பெற்றுக்கொள்ள முடியும். அக்காலக்கட்டத்தில், அவர் 2015 ஜனாதிபதித் தேர்தலிலும், 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் எமது பொதுக் கூட்டணியின் முக்கிய பங்காளியாக இணைந்து போட்டியிட்ட ஒருவராவார்.

அறியக்கிடைத்துள்ள தகவல்களின்படி, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்துத் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்துவதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பிரான்ஸ் வரை சென்றுள்ளனர். இது தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணிகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. நாம் பிள்ளையானைச் சிறையில் சந்தித்ததை வெறும் வாக்குமூலங்கள் மூலம் உறுதிப்படுத்துவதற்காகவே அரசாங்க அதிகாரிகள் இவ்வளவு தூரம் மக்கள் பணத்தில் பயணித்தார்கள் என்றால், அது அப்பட்டமான பொதுப்பண விரயமாகும்.
எனக்குத் தெரிந்தவரை, பிள்ளையான் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அல்ல. அப்படியாயின், அரசாங்கம் இவ்வாறான வீணான ஊடக நாடகங்களை நடத்தி யாரைத் திருப்திப்படுத்த முயல்கிறது? தேசிய மக்கள் சக்தியினர் (NPP) தேர்தலிற்கு முன்னரும் பின்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்துப் பல உண்மைக்குப் புறம்பான கதைகளைச் சமூகமயமாக்கியுள்ளனர்.
தற்போது இந்தத் தேசியத் துயரத்தை அரசியல் எதிரிகளை இலக்கு வைப்பதற்காகவும், பழிவாங்குவதற்காகவும் அரசாங்கம் பயன்படுத்த முனையுமாயின், அது இன்னமும் உண்மையான பதில்களையும் நீதியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இழைக்கப்படும் ஆகப்பெரும் அநீதியாகும்.

எந்தவொரு நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையான விசாரணைக்கும் முகங்கொடுக்க நாமும் எமது தரப்பும் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். நிலவும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்குக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு எமது முழுமையான ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்குவோம். எனவே, அரசாங்கம் செய்ய வேண்டியது, இத்தகைய வெற்று அரசியல் நாடகங்கள் மற்றும் ஊடகத் தலைப்புச் செய்திகளில் (Media Headlines) கவனம் செலுத்துவதை விடுத்து, நாட்டு மக்களுக்குப் பயனுள்ள பொருளாதாரப் பலன்களைப் பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்துவதாகும்” என நாமல் ராஜபக்ஷ தனது பதிவில் மிக விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.








