யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட ஆன்மீகப் பாதயாத்திரையின் முன்னோடிப் பயணம், நேற்று முன்தினம் (19) செவ்வாய்க்கிழமை பண்டத்தரிப்பிலிருந்து பக்திப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
ஜெயாவேல்சாமி தலைமையிலான இப்பாதயாத்திரை, மூத்த முருக பக்தரான துரைச்சாமி அடியாரின் விசேட வேண்டுகோளுக்கிணங்க, பண்டத்தரிப்பு பிரான்பற்று பெரிய வளவு முருகன் ஆலயத்திலிருந்து முதற்கட்டமாக 45 அடியார்களுடன் தனது பயணத்தைத் தொடங்கியது.
ஆரம்பிக்கப்பட்ட அன்றிரவு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் தங்கியிருந்த அடியார்கள், நேற்று (20) புதன்கிழமை மாவிட்டபுரம் ஊடாகப் பயணம் செய்து மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர். இன்று (21) தொண்டமானாறு அக்கரை நாகபூசணி அம்மன் ஆலயத்தை அடையும் இப்பாதயாத்திரைக் குழுவினர், நாளை (22) வெள்ளிக்கிழமை காலை தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தைச் சென்றடையவுள்ளனர்.

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து எதிர்வரும் 2026.05.23 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை கதிர்காமப் பாதயாத்திரை, விசேட பூஜைகளுடன் சம்பிரதாயபூர்வமாக முறைப்படி ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, மேலும் நூற்றுக்கணக்கான அடியார்கள் இப் பாரிய ஆன்மீகப் பயணத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கையின் மிக நீண்ட தூரப் பாதயாத்திரையாகக் கருதப்படும் இப்புனிதப் பயணம், வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மூன்று மாகாணங்களை இணைத்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாகக் கடந்து செல்லவுள்ளது.
சுமார் 55 நாட்கள் முழுமையாகக் கால்நடையாகப் பயணம் செய்து, வழியிலுள்ள 108 புனித ஆலயங்களைத் தரிசித்து, 815 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து கதிர்காம முருகனைத் தரிசிப்பதே இப்பாதயாத்திரையின் நோக்கமாகும்.
பக்தி, ஒழுக்கம், தியாகம் மற்றும் இறைநம்பிக்கையின் உன்னத வெளிப்பாடாக அமையும் ஜெயாவேல்சாமி தலைமையிலான இப்பாதயாத்திரையில், இடையில் இணைய விரும்பும் அடியார்கள் தங்களது விபரங்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 0776811875 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம்








