மலையக மக்களின் காணி உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், லிந்துலை சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 7 வயது சிறுவன் பிரேமராஜா கார்கி நேற்று (20) விசேட நடைபயணமொன்றை ஆரம்பித்தார்.
தலவாக்கலையிலிருந்து கொழும்பு ஜனாதிபதி செயலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வரை சுமார் 140 கிலோமீற்றர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு, மலையக மக்களின் நில உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை அதிகாரிகளிடம் கையளிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டது.
சிறுவயதிலேயே சமூக பிரச்சினையை முன்னிறுத்தி துணிச்சலுடன் நடைபயணத்தை ஆரம்பித்த சிறுவனுக்கு மலையகப் பகுதிகளில் பலரும் ஆதரவு வெளியிட்டதுடன், சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தலவாக்கலை நகரில் இருந்து ஆரம்பமான நடைபயணம் திம்புள்ள பத்தனை மற்றும் கொட்டகலை வழியாக ஹட்டன் நகரை அடைந்தபோது, ஹட்டன் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவினரால் இடைநிறுத்தப்பட்டது.
சிறுவர்களை அரசியல் மற்றும் சமூக போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது சிறுவர் உரிமை மீறலாக கருதப்படுவதால், பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








