கொழும்பு கங்காராம விகாரையின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற ‘புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின்’ (Buddha Rashmi Vesak Zone) ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் அக்காலாப்பகுதியில் மின்சக்தி பயன்பாட்டை முகாமைத்துவம் செய்தல் ஆகிய விடயங்கள் குறித்து அரசாங்கத்தின் உயர்மட்ட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான இறுதிப் பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று (20) அலரிமாளிகையில் (Temple Trees) பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் நடைபெற்ற போதே இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதற்கமைய, வெசாக் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாட்டின் பொதுவான எரிபொருள் மற்றும் மின்சாரப் பயன்பாட்டுக்காக அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த சில கடுமையான விதிமுறைகளை, தற்காலிகமாகத் தளர்த்துவது குறித்து இதன்போது அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. மேலும், வெசாக் வலயப் பணிகளை எவ்விதத் தடங்கலுமின்றி வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்கும், பாதுகாப்பை ஒருங்கிணைப்பதற்கும் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுக்களின் அதிகாரிகள் பற்றிய விபரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும், நாட்டில் தற்போது நிலவும் தற்காலிகப் பொருளாதார மற்றும் மின்சக்தி நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை எரிபொருள் மற்றும் மின்சாரத்தை அதியுச்ச சிக்கனத்துடன் பயன்படுத்துவதற்குக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துக் கொழும்பு கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் கருத்துத் தெரிவிக்கையில்,
“தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, குறைந்தபட்ச எரிபொருள் மற்றும் மின்சாரச் செலவுடன், பௌத்த தர்மத்தின் கொள்கை வழிபாட்டிற்கு (Prathipaththi Pooja) முதலிடம் வழங்கி, அதேநேரம் ஆமிச வழிபாட்டின் (Aamisa Pooja) மூலம் பக்தர்களின் மனங்களை மகிழ்விக்கும் வகையில் இம்முறை வெசாக் வலயத்தை எளிய முறையில் அலங்கரிப்பதற்குப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், மின்சார விரயத்தைத் தவிர்க்கும் நோக்கில், இம்முறை வெசாக் வலயக் காட்சிகள் அனைத்தும் இரவு 7.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்காக நடத்தப்படவுள்ளன” எனத் தெரிவித்தார்.








