அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட புகழ்பெற்ற கண்ணகி அம்மன் கோவில் அருகிலுள்ள காணியில், தொடர்ச்சியாகச் சட்டவிரோதமான முறையில் கொட்டப்படும் குப்பைக் கூளங்களால் அப்பகுதி முழுமையாக நிறைந்து வழிவதாகப் பொதுமக்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட இக்கோவில் காணியில் தினந்தோறும் பெருமளவிலான கழிவுகள் கொட்டப்படுவதால், வீதியின் இருபுறங்களிலும் குப்பை மேடுகள் தேங்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சிக்காக (Jogging) இப்பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், பலத்த காற்றின் தாக்கத்தால் குறித்த குப்பைகள் அருகிலுள்ள கடற்கரைப் பகுதிகளுக்கும் அடித்துச் செல்லப்பட்டு, ஒட்டுமொத்தக் கடற்சூழல் மாசுபாட்டையும் ஏற்படுத்தி வருகின்றன.

இக்காணியில் கொட்டப்படும் கழிவுகளில் உக்காத பிளாஸ்டிக் கலன்கள், பாலித்தீன் பைகள் மற்றும் மதுபானப் போத்தல்கள் (Beer Tins) போன்ற பொருட்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால், மழைநீர் இக்கழிவுகளுக்குள் தேங்கி நின்று, டெங்கு உள்ளிட்ட ஆபத்தான தொற்றுநோய்களைப் பரப்பும் கொசு உற்பத்தி மையங்களாக இவை உருவெடுக்கும் அபாயமும் தோன்றியுள்ளது.
மேலும், கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் (Beach Mosque) அண்மையிலும் அமைந்துள்ள இக்காணியில், சமூகப் பொறுப்பற்ற சிலரால் இரவு வேளைகளில் தொடர்ச்சியாகச் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளைத் தெருநாய்கள், கால்நடைகள் மற்றும் காகங்கள் கிளறி நாசமாக்குவதால், அயல் பகுதிகளில் உள்ள குடிநீர் நாடிக் கிணறுகளும், வடிகால் அமைப்புகளும் (Drainage) கடுமையாக அசுத்தமடைந்து வருகின்றன.

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு வழிபாட்டுத் தலங்களுக்கும், கடற்கரை போன்ற பொது பொழுதுபோக்குத் தளத்திற்கும் மிக அருகில் அரங்கேறும் இச்சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, கல்முனை மாநகர சபை நிர்வாகம் இதுவரை போதிய உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனப் பகுதி மக்கள் கவலையுடன் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் ‘குப்பை கொட்டுவதைத் தடை செய்யும்’ விழிப்புணர்வுப் பலகைகளை நாட்டி, சட்டவிரோதக் குப்பை கொட்டுவோருக்கு எதிராகக் கடுமையான தண்டப்பண நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் அவசரமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.








