மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யின் தரம் குறித்து பொதுமக்கள் வழங்கிய புகாரை அடுத்து, இன்று வெள்ளிக்கிழமை (22) விசேட அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
அப்பகுதிக்குப்பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) அடங்கிய குழுவினர், குறித்த வர்த்தக நிலையத்தில் இந்தத் திடீர்ச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இச்சோதனையின் போது, துர்நாற்றம் வீசிய நிலையிலும், நிறம் மாறியும், கடுமையான சுகாதாரச் சீர்கேடுகளுடனும் காணப்பட்ட 18 கலன்களில் (Cans) சேமித்து வைக்கப்பட்டிருந்த 286 கிலோகிராம் தேங்காய் எண்ணெய் கண்டறியப்பட்டது. மேலும், அந்த எண்ணெய்க் கலன்களில் தயாரிப்பு விபரங்கள் அடங்கிய லேபிள்கள் (Labels) எவையும் ஒட்டப்பட்டிருக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து, குறித்த 286 கிலோகிராம் தேங்காய் எண்ணெய்யையும் அதிகாரிகள் கைப்பற்றியதுடன், களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், வர்த்தக நிலைய உரிமையாளருக்கு 40,000 ரூபாய் அபராதம் விதித்ததோடு, கைப்பற்றப்பட்ட தேங்காய் எண்ணெய்யை உடனடியாக அழிக்குமாறு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்தத் தரமற்ற எண்ணெய் உடனடியாக அழிக்கப்பட்டதாகக் களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் த. கஜனன் தெரிவித்தார்.










