2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, இதுவரை உரிமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கும் வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை, எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பு – நாரஹேன்பிட்டி பிரதான காரியாலயம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்டக் கிளைகளில், சுமார் ஒரு இலட்சம் (100,000) வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் இதுவரை உரிமை கோரப்படாமல் குவிந்து கிடப்பதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வாகன உரிமையாளர்கள், நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்குச் சென்று தங்களது இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேசமயம், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அந்தந்த மாவட்டச் செயலகங்களில் (District Secretariats) அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்களில் தமக்குரிய வாகன இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் அல்லது விசாரணைகளுக்கு, திணைக்களத்தின் வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் பிரிவின் 011-2033333 என்ற உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








