புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கைதியாக இருந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் என்பவர் சிறைச்சாலையினுள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 46 வயதுடைய அவர், நேற்று முன்தினம் (24) இரவு சிறைச்சாலை வளாகத்தினுள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்களம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவியான சிவலோகநாதன் வித்தியா, கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு (துன்புறுத்தலுக்கு) உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தக் கொடூரக் கொலை வழக்குத் தொடர்பாக மேல் நீதிமன்ற நீதவான்கள் மூவர் அடங்கிய விசேட ‘ட்ரயல் அட் பார்’ (Trial-at-Bar) தீர்ப்பாயத்தின் மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய, கடந்த 2017 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தினால் பூபாலசிங்கம் ஜெயக்குமார் (சுவிஸ் குமாரின் சகோதரர்) உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன் பின்னர், தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்புக்கு எதிராகக் கைதிகள் தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இவர்களுக்கான மரண தண்டனையை அண்மையில் உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைதியின் தற்கொலைச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணப் பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








