மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தேர்தலைத் தொடர்ந்து பிற்போட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது என்று அறிவிப்பதற்கு ஜே.வி.பி.யின் (JVP) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு என்ன சட்டபூர்வ அதிகாரம் உள்ளது? மாகாண சபைத் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பதை ஜே.வி.பி.யின் கட்சித் தலைமையகமே தீர்மானிக்குமாயின், நாட்டில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு என்று ஒன்று எதற்கு? இந்த லட்சணத்தில் சென்றால் 2029 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலையாவது இந்த அரசு முறையாக நடத்துமா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மட்டக்களப்பு சிறையில் இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எமது கட்சியுடன் கூட்டணியமைத்துத் தேர்தல்களில் போட்டியிட்டவர் என்ற ரீதியில், அவரை நாங்கள் சிறைக்குச் சென்று நேரில் சந்தித்தோம். இதனை நாங்கள் மறைக்கவில்லை.

பிள்ளையானை நாங்கள் சந்திக்கச் சென்றதை அறிவதற்குக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) பிரான்ஸ் நாட்டிற்குச் செல்ல வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லை. மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள தினசரிப் பதிவுப் புத்தகத்தை (Log Book) ஆராய்ந்திருந்தாலே, நாங்கள் சென்று வந்ததற்கான சகல விபரங்களையும் அவர்கள் மிக எளிதாகப் பெற்றுக்கொண்டிருக்கலாம்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அநுர அரசு தவறியுள்ளது. தமது தோல்வியை மூடிமறைப்பதற்காகவே தற்போது எம்மீது வீண் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது. எவ்வாறெனினும், குண்டுத்தாக்குதல்கள் குறித்து அரசு முன்னெடுக்கும் நியாயமான சகல விசாரணைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம்” என்றார்.








