ஹட்டன் – டிக்கோயா பகுதியில் வர்த்தக நிலையத்தினுள் வயோதிப தம்பதியினர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று (24) ஹட்டன் மாவட்ட நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள், கடந்த வியாழக்கிழமை (21) 85 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் அவரது மனைவியான 82 வயதுடைய சகுந்தலாதேவி ஆகியோர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில், வர்த்தக நிலையத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த மூடிய சுற்றுக்காட்சி (CCTV) கேமராக்களில் பதிவான காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸாரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனடிப்படையில், இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர், பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் தலைமறைவாகி மறைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (23) மாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், கடந்த 21 ஆம் திகதி வயோதிப தம்பதியினரை படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியிருந்தார்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொகவந்தலாவை பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்து ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பதுளை – ஹாலிஎல – தெமோதறை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இந்தச் சந்தேகநபர், கொழும்பில் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் கெம்பியன் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடன் காதல் தொடர்பைப் பேணி வந்துள்ளார். குறித்த பெண்ணின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்த போதே சந்தேகநபர் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கொலைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி, கூரிய ஆயுதம் மற்றும் தம்பதியினரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்துத் தங்க நகைகளும் ஹட்டன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








