நிதி அமைச்சின் கணினி அமைப்பில் (Computer System) ஏற்பட்ட கடுமையான இணையவழிப் பாதுகாப்பு மீறலைத் (Cybersecurity Breach) தொடர்ந்து, ஹேக்கர்களால் (Hackers) சட்டவிரோதமாகக் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில், இலங்கை அதிகாரிகளால் வெறும் 200 அமெரிக்க டொலர்களை மட்டுமே மீட்க முடிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திறைசேரியிலிருந்து (Treasury) வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்குப் பாரியளவில் மாற்றப்பட்டதாகக் கூறப்படும், காணாமல் போன இந்த அரச நிதியைக் கண்டறிந்து மீட்கும் நோக்கில், இலங்கை அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் அவசர உதவி கோரியிருந்தனர்.
இதனடிப்படையில் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, கொள்ளையடிக்கப்பட்ட தொகையின் ஒரு பகுதி அமெரிக்காவின் டெலாவேர் (Delaware) மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிலும், மற்றொரு பகுதி வேறொரு மாநிலத்தில் உள்ள வங்கியிலும் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இருப்பினும், இலங்கை அதிகாரிகளுக்குப் பேரதிர்ச்சியூட்டும் வகையில், டெலாவேர் மாநிலத்தில் இருந்த வங்கிக் கணக்கு முற்றிலும் காலியாக இருந்ததாகவும், இரண்டாவது கணக்கில் வெறும் 200 அமெரிக்க டொலர்கள் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும் அமெரிக்கப் புலனாய்வுத் தரப்பால் இலங்கை அதிகாரிகளுக்குத் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹேக்கர்களின் கணக்கிலிருந்து மீட்கப்பட்ட மிகச் சிறிய தொகையான 200 அமெரிக்க டொலர்கள் மாத்திரம், மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் திறைசேரி மற்றும் இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.








