ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை (Overnight Policy Rate) 100 அடிப்படை புள்ளிகளால் (Basis Points) 8.75% ஆக அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி (CBSL) அதிரடியாகத் தீர்மானித்துள்ளது.
நேற்று முன்தினம் (25) நடைபெற்ற மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபைக் (Monetary Policy Board) கூட்டத்திலேயே இந்த முக்கிய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகள், பணவீக்கக் காரணிகள் மற்றும் எதிர்காலத்தில் நிதிச் சந்தையில் ஏற்படக்கூடிய சவாலான சூழ்நிலைகள் குறித்து உன்னிப்பாகப் பரிசீலித்த பின்னரே, நாணயக் கொள்கைச் சபை இந்த வட்டி வீத அதிகரிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இவ்வருட மார்ச் மாதத்தில் நடைபெற்ற நாணயக் கொள்கை மறுஆய்வின் போது, ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை 7.75% ஆக எவ்வித மாற்றமுமின்றிப் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப தற்போதைய கூட்டத்தில் அது 100 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் இந்த அதிரடி வட்டி வீத அதிகரிப்பு காரணமாக, வணிக வங்கிகளின் வட்டி வீதங்களிலும் வரும் நாட்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என நிதிச் சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.








