இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் (Indo-Sri Lanka Friendship Project) கீழ், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நடமாட்டப் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசாங்கத்தினால் 134 புதிய கெப் (Cab) வண்டிகள் நன்கொடையாக அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாகனத் தொகுதி, இந்திய அரசாங்கத்தின் சார்பில் நேற்று (25) ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
சுமார் 300 மில்லியன் ரூபாய் சந்தைப் பெறுமதியுடைய இந்த பாரிய கொடையானது, குறிப்பாக வட மாகாணத்தில் உள்ள பொலிஸ் திணைக்களத்தின் பொதுப்பாதுகாப்புச் சேவைகளை மேலும் நவீனமயப்படுத்தி வலுப்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் வட மாகாணத்தில் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கும் உடனடியாகப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் அண்டை நாடு மற்றும் நெருங்கிய நட்பு நாடு என்ற ரீதியில், எதிர்காலத்திலும் பாதுகாப்பு மற்றும் சிவில் நிர்வாகத் துறைகளை மேம்படுத்துவதற்கு இந்தியா இதேபோன்ற உதவிகளைத் தொடர்ந்து வழங்கும் என்று இந்திய உயர் ஸ்தானிகர் (High Commissioner) சந்தோஷ் ஜா இதன்போது உறுதியளித்தார்.
இந்திய அரசாங்கத்தின் இந்தத் தாராளமயமான நன்கொடைக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கும் வகையில், பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரியவினால் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்குச் சிறப்பு நினைவுப் பரிசொன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதி அமைச்சர் சுனில் வடகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.








