இன்று (27) மாலை சுமார் 4.00 மணியளவில், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை வீதியில் அமைந்துள்ள “கோ-ஆப் இன்” விடுதியின் அறை இலக்கம் 107-ல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், அங்கு தங்கியிருந்த 5 வயதுடைய சந்தனி நிமாஷா மற்றும் 3 வயதுடைய கசுன் மதுசங்க ஆகிய இரண்டு குழந்தைகள் புகை மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தைகள் தங்கள் தந்தையுடன் கடந்த 23ஆம் திகதி முதல் குறித்த விடுதியில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. காத்தான்குடியில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த தாயை பார்க்கவே குறித்த குடும்பம் பதுளைலிருந்து மட்டக்களப்பிற்கு வந்திருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின்படி, குழந்தைகளின் தந்தை மதுபானம் அருந்துவதற்காக பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் அறையை விட்டு வெளியேறியுள்ளார். செல்லும் முன் இரண்டு குழந்தைகளையும் அறைக்குள் பூட்டிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் திரும்பிய போது அறையில் தீ பரவி இருந்ததையும், இரண்டு குழந்தைகளும் மயங்கிய நிலையில் காணப்பட்டதையும் அடுத்து உடனடியாக மட்டக்களப்பு அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.









விடுதியின் உணவகப் பகுதியில் ஏற்பட்ட தீயை விடுதி ஊழியர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் தற்போது மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை நாளை நடைபெறவுள்ளது.








