மதவாச்சி, லுனுபஹிச்சாவ,கிகிலிகே வெவ பகுதியிலுள்ள பயிர்ச்செய்கை கிணறு ஒன்றிலிருந்து யானையொன்றின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த யானையானது காலில் ஏற்பட்ட காயத்தினால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்ததாகவும் அந்த வலியை குறைத்துக்கொள்வதற்காக அடிக்கடி நீர்நிலைகளுக்குள் இறங்குவதை வழக்கமாகவும் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்றும் வழமைபோல கிணற்றுக்குள் யானை இறங்கிய நிலையில் அங்கேயே உயிரிழந்திருக்கலாம் என அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
யானையின் உடல் பல நாட்களாக நீரில் மூழ்கியிருந்தமையால் வீசிய துர்நாற்றத்தின் காரணமாகவே மக்கள் அதனை அவதானித்துள்ளனர்.
7 அடி உயரமும், 30 வயது மதிக்கத்தக்கதுமான ஆண் யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
யானையின் மரணம் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








