கண்டியில் இருந்து ஹற்றன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கிய நிலையில் கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தகவலின்படி, சம்பந்தப்பட்ட சாரதி நண்பர்களுடன் இணைந்து கலந்து கொண்ட கொண்டாட்ட நிகழ்வில் மதுபானம் அருந்திய பின்னர் பேருந்தை இயக்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கண்டி தனியார் பேருந்து நிலையத்தைச் சேர்ந்த சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட அறுவர் சில நாட்களுக்கு முன்பு அதிகாலை வரை மதுபானக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், அதன் பின்னர் குறித்த சாரதி கடுமையான போதையில் பேருந்தை ஓட்டியதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கினிகத்தேனை, கெனல்வத்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கம்பளை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் கஹட்டபிட்டிய பகுதியில் வழமையான போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, அவர் தொலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை அதிவேகமாக இயக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அவர் மதுபோதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரை கைது செய்த பொலிஸார், எதிர்வரும் முதலாம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.








