ஜனாதிபதி பௌத்த விகாரைகள் மற்றும் புனிதத் தலங்களின் நிர்வாகங்களில் தலையிடுவதையும், அவற்றின் சொத்துக்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என ராஜாங்கனை சத்தாரதன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட விசேட காணொளிப் பதிவில் அவர் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
முந்தைய அரசுகளை மக்கள் மாற்றியது நாட்டை சீரமைப்பதற்காகவே தவிர, புனித தலங்களின் நிர்வாகங்களை அரச கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அல்ல என தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, சில விகாரைகளுக்குள் இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாகவும் அவர் கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
சிறுவர்களைத் துறவறத்தில் இணைத்த பின்னர் துஷ்பிரயோகம் செய்வது, பெண்கள் பக்தர்களை தவறான நோக்கில் அணுகுவது போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
விகாரைகளின் நிர்வாக எல்லையை மீறி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








