மாகாண சபைத் தேர்தல் முறைமைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, நாடு முழுவதும் வன்முறை மற்றும் அரச சொத்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தான் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் ஆரம்பகால அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபை முறைமைக்கு எதிராக தீவிரமாக செயல்பட்ட தரப்புகளில் ஜே.வி.பி முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்தார்.

அந்த காலப்பகுதியில் தலதா மாளிகை மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் செயல்கள் தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த வன்முறை காலத்தில் அரசுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டதாகவும், நாட்டின் சொத்துகள் சேதமடைந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், இன்று அதே அரசியல் தரப்பினர் கடந்த கால அரசியல் பாரம்பரியங்களை விமர்சித்து வருகின்றனர் என்றும் அவர் சாடினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தலை முன்பு எதிர்த்த அதே தரப்பினர், இன்று அதிகாரத்தில் இருந்தபோதும் தேர்தலை நடத்தாமல் தாமதப்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.








