இலங்கையில் எரிபொருள் விற்பனையின் மூலம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக பாரிய நிதி இழப்பைச் சந்தித்து வருவதாக வலுசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் மாத இறக்குமதி விலைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின்படி, பல எரிபொருள் வகைகள் தற்போது அவற்றின் உண்மையான செலவைக் காட்டிலும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் கட்டமைப்பு ரீதியான நஷ்டம் ஏற்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளிலேயே கூட்டுத்தாபனம் அதிகளவிலான நிதிச் சுமையை எதிர்கொண்டு வருவதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதன்படி, பெட்ரோல் 92 ரக எரிபொருளின் இறக்குமதிச் செலவு மற்றும் வரிகளை உள்ளடக்கிய சூத்திர விலை 432.59 ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அது தற்போது 398 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் லிட்டருக்கு 34.59 ரூபாய் நஷ்டம் பதிவாகியுள்ளது.
பெட்ரோல் 95 ரக எரிபொருளிலும் லிட்டருக்கு 22.46 ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒட்டோ டீசல் விற்பனையில் நிலைமை மேலும் சவாலானதாக காணப்படுகிறது. அதன் சூத்திர விலை 749.70 ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ள போதிலும், சந்தையில் 382 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் லிட்டருக்கு 367.70 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அத்துடன், சுப்பர் டீசல் விற்பனையில் லிட்டருக்கு 397.07 ரூபாய் இழப்பு பதிவாகியுள்ளதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன.
மண்ணெண்ணெய் விற்பனையிலும் குறிப்பிடத்தக்க இழப்பு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் சூத்திர விலை 580.53 ரூபாயாக இருந்த போதிலும், அது 255 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவதால் லிட்டருக்கு 325.53 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக வலுசக்தி அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன.
இதனால், எரிபொருள் விற்பனை விலைகள் மற்றும் உண்மையான செலவுகளுக்கிடையிலான இடைவெளி காரணமாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்து பாரிய நிதிச் சுமையைச் சுமந்து வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.








