ஹட்டன் நகரிலுள்ள கோழிச் சந்தைகளில் சேகரிக்கப்பட்ட கோழிக்கழிவுகளை ஹட்டன் ஓயா ஆற்றில் கொட்ட முயன்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (29) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஹட்டன் பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான முறையில் கோழிக்கழிவுகளை ஏற்றிச் சென்ற சிறிய லொறி ஒன்றை கண்காணித்துள்ளனர்.
ஹட்டன் – கொழும்பு பழைய வீதி வழியாக பயணித்த குறித்த லொறி, மகாவலி ஆற்றுடன் சங்கமிக்கும் ஹட்டன் ஓயா ஆற்றுப் பகுதியில் கோழிக்கழிவுகளை கொட்டத் தயாரான நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இருவரையும் கைது செய்ததுடன், லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட லொறி என்பன ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹட்டன் நகரிலிருந்து கோழி இறைச்சிக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் சில வாகனங்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நீரோடைகளில் கழிவுகளை கொட்டுவதாக பொதுமக்கள் நீண்டகாலமாக முறையிட்டு வந்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் பரவுவதுடன், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகளும் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், பொலிஸார் விசேட கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.








