நடப்பு ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 1 முதல் மே 28 வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,010,807 ஆக பதிவாகியுள்ளது.
மே மாதத்தின் தொடக்கம் முதல் மே 28 வரை மட்டும் 134,530 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 56,063 ஆகும். அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,582 பேரும், சீனாவிலிருந்து 8,439 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பிய நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. இந்தியாவிலிருந்து 245,981 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 97,427 பேரும், ரஷ்யாவிலிருந்து 75,963 பேரும் நாட்டிற்கு வந்துள்ளனர்.
அத்துடன், இந்த ஆண்டில் அதிகபட்ச மாதாந்திர சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் பதிவாகியுள்ளது. அம் மாதத்தில் 277,327 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
எனினும், பெப்ரவரி மாதத்திற்குப் பின்னர் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் படிப்படியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








