‘திட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண நன்னீர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 436 மில்லியன் ரூபாய்) பெறுமதியான விசேட அபிவிருத்தித் திட்டத்திற்கான ஒப்பந்தம் நேற்று (29) கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகத்தில் கையெழுத்திடப்பட்டது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமாடா மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு வதிவிடப் பிரதிநிதி விம்லேந்திர ஷரன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இத்திட்டத்திற்கான முழுமையான நிதி உதவியை ஜப்பானிய அரசாங்கம் வழங்கவுள்ளதுடன், தொழில்நுட்ப ஆதரவை FAO வழங்கவுள்ளது.
திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 நீர்த்தேக்கங்களில் 200 மீன் வளர்ப்பு கூடுகள் நிறுவப்படவுள்ளதுடன், தேவையான தடுப்பு வலைகள் வழங்கப்படவுள்ளன. மேலும், இங்கிணியாகல மீன் இனப்பெருக்க நிலையத்தின் வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, மீனவ சங்கங்களுக்கு கூண்டு மீன் வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், முதற்கட்ட மீன் வளர்ப்பிற்குத் தேவையான மீன் குஞ்சுகள் மற்றும் மீன் உணவுகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், குறைந்த செலவில் புரதத் தேவையை பூர்த்தி செய்வதற்கும், எதிர்காலத்தில் ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நவீன கூண்டு மீன் வளர்ப்பு முறை பெரும் பங்களிப்பை வழங்கும் எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, நன்னீர் மீன்பிடித் துறையை வலுப்படுத்துவது இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்கு முக்கியமானதாகும் என ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமாடா தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








