மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், தேர்தலை நடத்துவதை உறுதி செய்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான எம்.ஏ. சுமந்திரன், பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தில் மாற்றம் கொண்டுவரும் தனிநபர் பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார் என்றார்.
எனினும், அப்போதைய ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அதனை 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் எடுத்துக்கொள்ளாததால், அந்தப் பிரேரணை நடைமுறைக்கு வரவில்லை என அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த ஆண்டு தாம் சமர்ப்பித்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை தற்போது விசேட கவனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் மக்களிடம் உறுதியளித்திருந்ததாக சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டினார். அந்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான நிர்வாகத்தில் மாகாண சபைகள் முக்கிய பங்காற்றுவதால், அந்த இரண்டு மாகாணங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுவது மிகவும் அவசியமானது எனவும் அவர் கூறினார்.
பழைய தேர்தல் முறைமையின் அடிப்படையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம் என்ற நிலைப்பாட்டை பல்வேறு அரசியல் தரப்புகளும் ஆதரித்து வருவதாகவும், சட்டமா அதிபர் திணைக்களமும் பாராளுமன்ற விசேட செயற்குழுவுக்கு அதேபோன்ற பரிந்துரையை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைக் கருத்தில் கொண்டு, மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.








