சென்னை கோயம்பேடு பகுதியில் கார் மோதி இலங்கை அகதி இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதுடைய யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் ஊடாக சென்னை சேர்ந்த பெண் ஒருவருடன் நட்புறவு பேணி வந்துள்ளார்.
தனது தோழியைச் சந்திப்பதற்காக சென்னை சென்றிருந்த யான்சி, இரவு நேரத்தில் கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றபோது அங்கு மற்றொரு குழுவினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருதரப்பினரையும் கேளிக்கை விடுதியின் பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்த யான்சி மீது, தகராறில் ஈடுபட்டிருந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் கார் ஒன்றை வேகமாக மோதியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமி ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது சுயநினைவை இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கோயம்பேடு பொலிஸார், பாலகுரு, சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரில் அரசியல் கட்சியொன்றின் கொடி கட்டப்பட்டிருந்ததும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் இடம்பெற்ற கேளிக்கை விடுதிக்கும் அதிகாரிகள் முத்திரையிட்டுள்ளனர்.








