உலகளவில் பரவி வரும் எபோலா வைரஸ் மற்றும் இலங்கையில் பதிவாகி வரும் மெனிஞ்சைடிஸ் (மூளைக்காய்ச்சல்) நோய் நிலைமைகள் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் பரவி வரும் மெனிஞ்சைடிஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறினார்.
அதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்திய அவர், சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், எபோலா வைரஸ் தொடர்பில் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், தேவையான அறிவுறுத்தல்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சில ஆபிரிக்க நாடுகளில் முதன்முதலில் கண்டறியப்பட்ட எபோலா நோயை உலக சுகாதார நிறுவனம் அவசர சுகாதார நிலைமையாக அறிவித்ததைத் தொடர்ந்து, இலங்கையின் சுகாதார அமைப்பும் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மெனிஞ்சைடிஸ் நோய் தொடர்பில், முதல் நோயாளி அடையாளம் காணப்பட்ட நாளிலிருந்தே தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதன் ஒரு பகுதியாக, அண்மையில் நடைபெற்ற தான்சல் நிகழ்வுகளில் குளிர்பானங்களுக்கு பதிலாக தேநீர் போன்ற சூடான பானங்களை வழங்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது நோய் பரவல் ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், மக்கள் அலட்சியமாக நடந்து கொள்ளாமல் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக்கொண்டுள்ளார்.








