இலங்கை போக்குவரத்துச் சபை வவுனியா சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் தொடர்ச்சியாக தாமதமாகி வருவதால், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா இ.போ.ச சாலையில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான மே மாதச் சம்பளம் கடந்த மே 26ஆம் திகதி வழங்கப்பட்டிருக்க வேண்டியிருந்த நிலையில், பல நாட்கள் கடந்தும் இதுவரை வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அலுவலக ஊழியர்கள் மட்டுமன்றி, சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்களும் இதே பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கான ஏப்ரல் மாதச் சம்பளம் மே 8ஆம் திகதி வழங்கப்பட வேண்டியிருந்த போதிலும், அது சுமார் ஒரு வாரம் தாமதிக்கப்பட்டு மே 14ஆம் திகதியே வழங்கப்பட்டதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது நாட்டில் டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், ஜூன் 8ஆம் திகதி வழங்கப்பட வேண்டிய மே மாதச் சம்பளமும் தாமதமாகுமோ என்ற அச்சம் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள சூழ்நிலையில், சம்பளத் தாமதம் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பளக் கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என வவுனியா இ.போ.ச ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








