யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா அவர்களின் திடீர் இடமாற்றம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படக்கூடும் என எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திலிருந்து பதுளை சிவில் மேன்முறையீட்டு உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி அலெக்ஸ்ராஜா இடமாற்றம் செய்யப்பட்டமை குறித்து தங்களது அதிர்ச்சியையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற அவர், ஒரு மாத காலத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சங்கத்திற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வட மாகாண ஆளுநருக்கு எதிரான சில வழக்குகளில் நீதிபதி வழங்கிய உத்தரவுகளே இந்த இடமாற்றத்திற்கான காரணமாக இருக்கக்கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் அந்த உத்தரவுகள் இரத்து செய்யப்பட்டதுடன், அவை நீடிக்கப்படவும் இல்லை என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வட மாகாண ஆளுநர் அரசாங்கத்தின் சில உயரதிகாரிகள் மற்றும் அமைச்சரொருவரின் தலையீட்டை நாடியதாகவும், அதுகுறித்து நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவின் இடமாற்ற அதிகாரத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ள சங்கம், திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்கள் நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளது.
நீதித்துறையின் செயற்பாடுகளில் நிர்வாகத் துறையின் தலையீடு இடம்பெற்றதாக தோன்றும் சூழ்நிலையே மிகவும் கவலைக்குரியது என்றும், இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடி மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் நேரடியாக விளக்கமளிக்கும் நோக்கில் ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பையும் வழங்குமாறு யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் தனது கடிதத்தில் கோரியுள்ளது.









