அரசாங்கம் அண்மையில் மேற்கொண்டுள்ள எரிபொருள் விலை உயர்வு நியாயமற்றதும் மக்களுக்குச் சுமையாக அமைந்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ள நிலையிலும், இலங்கையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பது கேள்விக்குறியாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சியின் கருத்துப்படி, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு சுமார் 26 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும், இத்தகைய சூழலில் உள்நாட்டு எரிபொருள் விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டமை விலைச் சூத்திரத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், எரிபொருள் விலை நிர்ணயிக்கும் நடைமுறை மற்றும் அதற்கான கணக்கீட்டு அடிப்படைகள் தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் இறக்குமதி நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எதிர்க்கட்சி முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வால் மக்களின் வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி, அரசாங்கம் தனது முடிவை மீளாய்வு செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.








