மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர்ச் சூழலும், அண்மைய எரிபொருள் விலை உயர்வும் இலங்கையின் பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (01) இரவு ஒளிபரப்பான ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், தற்போது 5.4 முதல் 5.5 சதவீதமாக காணப்படும் பணவீக்கம் எதிர்வரும் காலங்களில் 7 சதவீதம் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார்.
மத்திய கிழக்கு மோதல் குறுகிய காலத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது நீடித்துவருவதால் உலகளாவிய எரிபொருள் சந்தையிலும், அதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை உயர்வுடன், உள்நாட்டு நுகர்விலும் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்படாத நிலை காணப்படுவதால் பணவீக்க அழுத்தம் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வாரம் மத்திய வங்கி தனது நாணயக் கொள்கையை மேலும் இறுக்கமாக்கியதாகவும், அடுத்த சில மாதங்களில் தேவையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கத்தை நிர்வகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், சட்டபூர்வமான வருமானத்தை வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்புவதற்கு எந்தவித தடையும் இல்லை எனத் தெரிவித்த ஆளுநர், நாட்டின் பணமோசடி தடுப்பு சட்டங்களின் கீழ் சட்டவிரோத நிதி பரிமாற்றங்களுக்கே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.








