உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்களின் தாக்கத்தால், இலங்கையில் பணவீக்கம் 7 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், தற்போது 5 சதவீதத்துக்கும் மேல் உள்ள பணவீக்கம், அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளால் மேலும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் பொருளாதாரத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நுகர்வில் இதுவரை கணிசமான குறைவு காணப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அடுத்த மூன்று மாதங்களில் தேவையைக் கட்டுப்படுத்தவும் பணவீக்க அழுத்தத்தைக் குறைக்கவும் மத்திய வங்கி அண்மையில் பணவியல் கொள்கையை மேலும் இறுக்கியுள்ளதாகவும் ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.
பணவீக்கம் மேலும் அதிகரிப்பதைத் தடுக்க நுகர்வு மற்றும் தேவையைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








