உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படாமல் அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு நிறுவன மாஃபியாக்கள் மற்றும் ஊழல்களே காரணம் என சுகீஸ்வர பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் கடந்த எட்டு மாதங்களில் பல்வேறு தவறான பொருளாதார முடிவுகளை எடுத்துள்ளதாக விமர்சித்தார். தரமற்ற நிலக்கரி இறக்குமதி, அதிக விலைக்கு எரிபொருள் கொள்வனவு மற்றும் மின்சார முகாமைத்துவ குறைபாடுகளால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் நோக்கிலேயே எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தெற்காசியாவில் அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், சமீப மாதங்களில் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், ஈரான் – இஸ்ரேல் மோதலை விலை உயர்வுக்கான காரணமாக அரசாங்கம் சுட்டிக்காட்டுவது உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் கொள்வனவுகளில் இடம்பெறும் தரகுப் பணம் தொடர்பில் அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் விமர்சித்தார்.
எதிர்காலத்தில் எரிபொருள் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்த சுகீஸ்வர பண்டார, மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயக்கம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டினார்.








