யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் நீதிபதி அலெக்ஸ் ராஜாவின் திடீர் இடமாற்றம் தொடர்பில் வடக்கில் பல்வேறு தரப்பினரிடையே சந்தேகங்கள் எழுந்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் , இந்த இடமாற்றம் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்து சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
அவரின் கூற்றுப்படி, நீதிபதி அலெக்ஸ் ராஜா அண்மைக்காலமாக வடக்கில் பெரும் கவனத்தை ஈர்த்த சில வழக்குகளை விசாரித்து வந்த நிலையில், திடீரென பதுளைக்கு மாற்றப்பட்டுள்ளார். குறிப்பாக பருத்தித்துறை நகர சபை விவகாரம் மற்றும் ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பான வழக்குகளில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் சில அதிகாரத் தரப்புகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த இடமாற்றத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு இருக்கலாம் என்ற சந்தேகங்கள் ஏற்கனவே சட்டத்துறையினரிடமும் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வட மாகாண ஆளுநர் மற்றும் அமைச்சரொருவரின் செல்வாக்கு இந்த நடவடிக்கையில் இருந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நீதிபதியின் திடீர் இடமாற்றம் வடக்கில் வாழும் மக்களிடையே நீதித்துறையின் சுயாதீன செயற்பாடு தொடர்பில் கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும், நீதித்துறையின் மீது அரசியல் அழுத்தங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் அதிகாரப்பூர்வ விளக்கங்கள் வெளியாகாத நிலையில், உண்மையான காரணம் குறித்து தெளிவான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.








