கொழும்பு மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டியாவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 3 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில், கோட்டை மதிவெல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணைகளின்படி, சந்தேகநபர் தேவையான கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார். எனினும், நடைமுறைகளுக்கு அமைவாக கியூஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்க முடியாது என ஊழியர் தெரிவித்ததைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் பின்னர் தாக்குதல் சம்பவமாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், தாக்குதலுக்கு உள்ளான ஊழியர் இந்த விவகாரத்தை சுமூகமாகத் தீர்த்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததுடன், புகாரைத் தொடர விரும்பவில்லை எனவும் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சந்தேகநபருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சம்பவம் தொடர்பான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








