இணைய வழி சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் பிற நாடுகளிலிருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதைத் தடுப்பதற்காக சீனாவும் இலங்கையும் இணைந்து கூட்டுச் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் வெளிவிவகார, நிதி மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், இரு நாடுகளின் சட்ட அமுலாக்க முகவர் நிறுவனங்களுக்கு இடையிலான நடைமுறை ரீதியான ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மற்றும் விசாரணைகளின் போது, பல சட்டவிரோத சூதாட்ட மற்றும் மோசடி மையங்கள் முற்றுகையிடப்பட்டு, பெருமளவிலான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளதுடன், மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சில சீன பிரஜைகள் சீன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
எல்லை தாண்டிய சூதாட்ட நடவடிக்கைகள் குறித்து சீன அரசின் நிலைப்பாடு கடுமையானதாக இருப்பதாகவும், சீன பிரஜைகள் வெளிநாட்டு சூதாட்ட நிலையங்களை இயக்குவதும் அல்லது அதில் ஈடுபடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய நடவடிக்கைகள் பணமோசடி, மனித கடத்தல், கடத்தல் மற்றும் சட்டவிரோத எல்லைத் தாண்டல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான குற்றவியல் வலையமைப்புகளை ஒடுக்கி, சந்தேகநபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் இரு நாடுகளின் குடிமக்களின் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் சட்டபூர்வ உரிமைகளை பாதுகாக்க முடியும் என சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.








