பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாடகர் கணேஷ்குமார் சங்கீதன் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழர்களை மீண்டும் பலிகடாவாக்கும் அரசியலின் ஒரு பகுதியாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இன்று (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சங்கீதன் மீது பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருப்பதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தற்போதைய அரசியல் போக்கு மற்றும் பொருளாதார சவால்கள் காரணமாக உருவாகியுள்ள மக்கள் அதிருப்தியை திசைதிருப்பும் நோக்கில், விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் தொடர்பான விவாதங்கள் முன்னிறுத்தப்படுகின்றன என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தேர்தல் காலங்களில் பல்வேறு அரசியல் தரப்பினரும் விடுதலைப்புலிகள் தொடர்பான பாடல்களை பயன்படுத்தியிருந்த போதிலும், தற்போது எழுச்சிப் பாடல்கள் பாடியதாகக் கூறி சங்கீதன் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நூல்கள் சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும் அவர் விமர்சித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கருத்து வெளிப்பாட்டாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவது பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமைவதாகவும், இந்த நிலைமை வடக்கு மட்டுமின்றி தெற்கிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் ஜனநாயக சுதந்திரங்களைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அருட்தந்தை மா. சத்திவேல் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.








