போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் அவரது கணவரும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் மூலம் ஈட்டியதாகக் கூறப்படும் நிதியில் வாங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, தொட்டலங்க பகுதியில் அமைந்துள்ள சுமார் 300 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1.30 பேர்ச் காணி மற்றும் 0.75 பேர்ச் காணியுடன் கூடிய மூன்று மாடி வீடு ஆகியவை பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன.
இச்சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பெண்ணின் இரண்டாவது கணவரால் சட்டவிரோத வருமானத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சொத்துக்கள் தொடர்பான முடக்கக் கட்டளையை கொழும்பு மேல் நீதிமன்றம் நீடித்து அமுல்படுத்தியுள்ளதுடன், ஜூன் 5 ஆம் திகதி முதல் ஏழு நாட்களுக்கு அந்தக் கட்டளை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.








