சர்வஜன அதிகாரத்தின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) தவறாகப் பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே, இன்று (05) பிற்பகல் கொழும்பிலுள்ள சர்வஜன அதிகாரக் கட்சி அலுவலகத்தில் திலித் ஜயவீர உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திலித் ஜயவீர, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிக்கும் முயற்சிகளில் முக்கிய பங்காற்றியவர் எனக் குறிப்பிட்டார். அவருக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்ற சட்டக் கோட்பாடு அவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருமுன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த மாட்டோம் என உறுதியளித்ததாகவும், அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடியது என அப்போது சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறினார்.
தற்போது தடுத்து வைத்தல் உத்தரவுகளின் கீழ் நபர்களை காவலில் வைப்பது சட்டத்தின் கடுமையான தவறான பயன்பாடாக இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இதற்கு எதிராக தேசிய மட்டத்தில் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இனி இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.








