2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, “காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (05) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
நிலையான சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில், சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையிலான சமநிலையைப் பேணுவதற்கு தற்போதைய அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருவதாக நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றக் கட்டமைப்பு உடன்படிக்கையின் கொள்கைகளுக்கு அமைவாக, பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்கும் உலகளாவிய முயற்சிகளில் இலங்கை தொடர்ந்து பங்களித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே 30 முதல் ஜூன் 5 வரை சுற்றுச்சூழல் வாரமாக அறிவிக்கப்பட்டு, “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
நிகழ்வின் போது ரிடிகல, அலியாவெடுணுவெவ, முலாகல, கோன்கெட்டியாவ மற்றும் கல்லஞ்சிய ஆகிய ஐந்து வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாக அறிவிக்கப்பட்டன. மேலும், மாகம மணல் மேட்டுப் பகுதி பாதிப்புக்குள்ளாகும் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன், யானை வழித்தடங்கள் விடுவிக்கப்பட்டன. ‘குடா புபுல’ நீர் ஊற்று மற்றும் ‘கபுரெல்ல’ வெந்நீர் சதுப்புநிலப் பகுதிகளும் வன ஒதுக்கீடுகளாக அறிவிக்கப்பட்டன.
அத்துடன், மேம்படுத்தப்பட்ட தேசிய பசுமை அறிக்கை வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, “சொபா” சுற்றுச்சூழல் சஞ்சிகையின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாவது பதிப்பு, “சொபா கெத” சஞ்சிகை மற்றும் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான நூலும் வெளியிடப்பட்டன.
இந்த ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் தின நிகழ்வு பூச்சிய கார்பன் உமிழ்வு திட்டமாக நடத்தப்பட்டதற்கான சான்றிதழும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
மேலும், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்வின் நிறைவாக சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களுடன் குழுப் புகைப்படத்திலும் ஜனாதிபதி இணைந்துகொண்டார்.








