நெல் விவசாயிகளுக்கான உர மானியத் தொகை ஒரு ஹெக்டேயருக்கு 25,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை அறிவித்தார்.
இந்த அதிகரிப்பின் மூலம் 502,836 விவசாயிகள் பயனடைவார்கள் என அவர் குறிப்பிட்டார். இதற்காக அரசாங்கம் 10,947 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதுடன், மானியத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சந்தை விலை உயர்ந்தாலும், முழு யால பருவத்திலும் நெல் விவசாயத்திற்குத் தேவையான ஒரு மூட்டை யூரியா உரத்தை 10,200 ரூபாய் என்ற நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார். இந்த உரம் விவசாய சேவை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
விவசாயிகள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு இப்பருவம் முதல் உர மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக வழமையை விட சுமார் 2,500 மில்லியன் ரூபாய் கூடுதலாக அரசாங்கம் செலவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை யால பருவ நெற்செய்கை 409,670 ஹெக்டேயர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 364,900 ஹெக்டேயருக்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.








