பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரி இன்று கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
“குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்” என்ற தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் பெருமளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சங்கீத்சனின் விடுதலையை வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பில் எதிர்ப்புத் தெரிவித்தும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். மேலும், கருத்துச் சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் நடைமுறை தொடர்பான கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.
இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள கலைஞர் சங்கீத்சனை விடுதலை செய்ய வேண்டும் என்பதையும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைதுகள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.








