பெற்றோருக்குச் சொந்தமான சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிய பின்னர், அந்தப் பெற்றோர்களைக் கவனிக்காமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் பிள்ளைகளின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிகிந்தும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்ட பின்னர், அந்தப் பெற்றோர்களைப் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பொருத்தமான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்தத் திருத்தங்கள் தற்போது சட்ட வரைபுத் திணைக்களத்திற்கு (Legal Draftsman’s Department) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சில பிள்ளைகள் தங்களுக்குச் சொந்தமான பெற்றோரின் சொத்துக்களை மிகவும் சூட்சுமமான முறையில் தங்கள் பெயர்களுக்கு எழுதிக் கொண்டு, பின்னர் அவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதாகவும், அவர்களைக் கைவிடுவதாகவும் கிடைத்துள்ள முறைப்பாடுகளைக் கருத்திட்டே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டதன் பின்னர், பெற்றோர்களைக் கவனிக்காமல் இருப்பதற்கு பிள்ளைகளுக்கு எவ்வித வாய்ப்பும் கிடைக்காது என பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெற்றோர்களின் பாதுகாப்பு, அவர்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக அவசர வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.








